
ஆதி முதல் அந்தம் வரை
பிறப்பு முதல் இறப்பு வரை
எவ்வளவோ எதுஎதுக்கோ
அழுதும் சோகத்தை சிறிதும்
குறைக்க முடியா கண்ணீரை,
நன்றிகெட்ட மனிதருக்கு
சாபமென கடவுள்
தந்துவிட்டதாய் நினைக்கிறேன்
அதிலும் என் வாழ்வில்
வாழ்நாள் முழுவதும் தொடர
விதி செய்திட்டார் போலும்
பிறந்த போது பசிக்கு அழுதேன்
தாய் பாலூட்டி சோறூட்டி
பசி போக்கினாள்
வளரும் போது அழுதேன்
தந்தை என் துயர் தீர்த்தார்
படிக்க முடியாமல் அழுதேன்
ஆசிரியர் எனக்கு உதவினார்
முதல் வகுப்பு முதல்
கல்லூரிப்படிப்பு வரை
நான் அழும் போதெல்லாம்
தோழரெல்லாம்
தோள் கொடுத்து காத்தனர்
காதல் தோல்வியால் அழுதேன்
அப்போதும் சகமனிதனால்
ஆறுதலை பெற்றேன்
இன்றோ
கண்ணீர் தீர்ந்துவிட்டது
அழுகை தீரவில்லையே
புலி வருவதாய் பொய் சொல்லி
ஏமாற்றியவனை, இறுதியில் புலி
வந்து அடித்ததை போல
அப்போது நான் பொய்யாய்
தேவயற்றவைகளுக்காக
அழுத போதும் உதவிய கரங்கள்
என் அழுகையால் நானே
மூழ்கிச் சாகும் நிலைமையில்
இருக்கும் போது முடங்கிப்போனது
அன்று கிடைத்த பாசமும்,
பாதுகாப்பும், கண்ணீரை துடைக்கும்
நடப்பும் இன்றெங்கே போனது
இதை நினைக்கும் போது
கண்ணீரை கடன் வாங்கியாவது
அழத்தோன்றுகிறது எனக்கு
பல ஜென்மங்களாய் தவமிருந்து
இந்தச் சாபம் பெற்று வந்தேனா
இதிலிருந்து விடு பட முடியாமல்
தவிக்கிறேன்
இறைவா !!!!!!!!!
நானொன்றும் என்
அழுகையை என் மனக்குமுறலை
சுத்தமாய் தீர்த்துவிட
உன்னிடம் வேண்டவில்லை
என் சிறுவயதில் என் துயர் தீர்க்க
தாயாகவோ,தந்தையாகவோ
நண்பனாகவோ, ஒரு சக மனிதனாக
இவர்களின் உருவெடுத்து வந்தாய்
இப்போதும் கூட இதே போன்ற
சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறேன்
நீ திரும்பவும் வருவாய் என்று
நம்பிக்கொண்டிருக்கிறேன்
அப்படி நீயே வருவாயானால்
மனிதனே இல்லாத உலகில்
தனியாய் சுற்றித்திரிபவன் போல்
அனாதையாய், எல்லோராலும்
விளக்கி வைக்கப்பட்டவனாய்
எல்லோராலும் வெறுக்கப்பட்டவனாய்
தனிமையில் வாடி
கண்ணீரிலும் தீர்ந்த நிலையில்
தவித்துக்கொண்டிருக்கும்
என் மேல் இருக்கட்டும்
உம் முதல் ஆசீர்வாதம்
உன் முதல் கரிசனம்
அது என் வாழ்நாளில் அழுகையை
மறக்கச்செய்யட்டும்
மற்றவர் என்னை கரிவேப்பில்லையாய்
உபயோகித்து தூர வீசி ,
என்னை வார்த்தைகளால் வதைத்து
உறவுகள் எல்லாம் பொய் என்றென்னை
எண்ண வைத்து எனக்கு யாருமே
இல்லை என நம்பவும் வைத்துவிட்டனர்
எனக்காய் நீ மட்டும் தான் இருக்கிறாய்
என்று மற்றவருக்கு வேண்டாம்
மிகக்குறைந்த அளவில்
எனக்காவது உணர்த்து
No comments:
Post a Comment