Saturday, February 1, 2014

இது முடிவின் துவக்கம்












எனக்கே தெரியாமல் நான்
எங்கோ தொலைந்துவிட்டேன்
என் முகவரியை  இழந்துவிட்டேன் 
இதயம் காலியாய்
எண்ணம் வெறுமையாய்
ஒன்றுமற்றவனாய்  
யோசிக்க கூட முடியாமல்
ஏதோ ஒரு பாரம் நெஞ்சடைக்க
தேம்பிக்கொண்டு நிற்கிறேன்
தனிமையில் 

சந்தோசமோ துக்கமோ 
ஒரு நட்பாய், உறவாய், காதலாய் 
ஏன் உயிர் குடுக்கும் 
என் சுவாசமாய் நான் நேசித்த
என் கவிதைகளும் இன்று
எனக்கு வர மறுக்கிறது

இப்போது கவிதை என்று 
எதுவுமே எனக்கு தோன்றவுமில்லை 
இனி எழுதுவேனென்ற நம்பிக்கை
துளியும் இல்லை
எனக்குள்ளிருந்த கவிஞனின்
மரணத்தருவாயோ இது??

மணல் கேணியாய் தோண்ட
தோண்ட ஊற்றெடுக்கும் என்ற
இருமாப்பில் இருந்துவிட்டேனோ
கைப்பிடி மணலாய் இன்று
துளியுமில்லாமல் வற்றிபோனது   

என் தவறு தான் 
அணையப்போகிற தீபம்
அற்புதமாய் ஒளிர்வது போல
கடைசிகட்ட கவிதைகள்
இது முடிவின் துவக்கம் என 
சொல்லியதை புரிந்துகொள்ளாமல்
அலட்சியமாய் இருந்துவிட்டேன்

இனி அழுதென்ன லாபம்
வார்த்தைகளற்ற வெள்ளை காகிதமாய் 
உயிரற்ற உடலாய் மீதி வாழ்க்கையை
வெறுமையுடன் தொடர முயல்கிறேன்